புதுதில்லி: ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை அமல் செய்யும் பொழுது தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று தில்லியில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை விரைவில் அமல் செய்வது தொடர்பான மாநில நிதியமைச்சர்களின் கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக மாநில நிதி அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை அமல் செய்யும் பொழுது தமிழகத்தின் சுயாதீன உரிமை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த வரி விதிப்பு முறையை அமல் படுத்தும் பொழுது மாநிலத்திற்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய தனி அமைப்பு உருவாக்கப்படவேண்டும். அத்துடன் வருவாய் இழப்பு எவ்வாறு ஈடு செய்யப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட வேண்டும். வருவாயில் நடுநிலை விலக்கம் அளிக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி அமல் செய்யப்பட்டால் உற்பத்தி அதிகமுள்ள மாநிலங்கள் வருவாயிழப்பை சந்திக்க வேண்டி இருக்கும். மேலும் பெட்ரோலிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
இறுதியாக ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை அமல் செய்யும் பொழுது தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறான அனைத்து பரிந்துரைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டதால் ஜி.எஸ்.டி மசோதாவுக்கு தமிழகம் ஆதரவு அளித்தது.
இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.