தனியார் பாலில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம்: அமைச்சர் அதிர்ச்சித் தகவல்
புற்றுநோயை வரவழைக்கும் ரசாயனங்கள் தனியார் பால் பாக்கெட்டுகளில் கலந்திருப்பதாக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
புற்றுநோயை வரவழைக்கும் ரசாயனங்கள் தனியார் பால் பாக்கெட்டுகளில் கலந்திருப்பதாக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
சென்னை நந்தனம் ஆவின் கூட்டாண்மை அலுவலகத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
ஆவின் பால் தாய்ப்பாலுக்கு நிகரானது என்பது முற்றிலும் உண்மை. தமிழகம் முழுவதும் ஆவின் மற்றும் தனியார் பால் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.
குறிப்பிட்ட இடங்களில் தனியார் பால் விற்பனை அதிகமாக உள்ளது. இதற்கான காரணத்தை ஆய்வு செய்தபோது அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. பால் 4 அல்லது 5 நாள்கள் கெட்டுப் போகாமல் இருக்க அதில் ரசாயனம் கலப்பது தெரியவந்துள்ளது.
மாதிரிகளை புணேவுக்கு அனுப்ப முடிவு: இறந்து போனவர்களின் உடல் கெடாமல் இருக்க ரசாயனம் உடலில் ஏற்றப்படுகிறது. இதனைப் போல் பாலில் ரசாயனம் கலக்கிறார்கள். இது குறித்துக் கிடைத்த ஆதாரங்களை வைத்து அந்த மாதிரிகளை புணேவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
இதுபோன்ற நடவடிக்கையைத் தடுக்கக் குழு ஒன்றை அமைக்கவும் ஆலோசனை செய்து வருகிறோம். கேரளத்தில் இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்பட்டு இதே மாதிரியான பால் தடை செய்யப்பட்டுள்ளது.
தனியார் கம்பெனிகள் அதிக கமிஷன் கொடுக்கிறார்கள் என்பதால் அந்த கம்பெனிக்கு ஆதரவாக முகவர்கள் பேசுகிறார்கள். தமிழகத்தில் அண்மைக் காலமாக குழந்தைகள், பெரியவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கு இது முக்கியக் காரணமாக உள்ளது. இதனைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும்.