சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலர் என். பெரியசாமி வெள்ளிக்கிழமை காலை மரணமடைந்தார். அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை (மே 28) அடக்கம் செய்யப்படுகிறது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலராக இருந்துவந்த என். பெரியசாமி (78) நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து என்.பெரியசாமியின் உடல் வெள்ளிக்கிழமை இரவு தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் சனிக்கிழமை (மே 27) காலை முதல் இரவு வரை அவரது வீட்டின் முன் வைக்கப்படுகிறது.
இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு போல்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் அருகேயுள்ள காலியிடத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 28) காலை 10 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. உயிரிழந்த என். பெரியசாமியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் ஆகும்.
சிறுவயது முதலே தூத்துக்குடியில் குடியேறிய பெரியசாமி திமுக தொழிற்சங்க நிர்வாகியாகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். திமுக தலைவர் மு. கருணாநிதி மீது அதிகப் பற்று கொண்டவராக இருந்ததால் அவரை தனது முரட்டு பக்தன் என மேடைகளில் கருணாநிதி குறிப்பிடுவது உண்டு.
கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலராக நியமிக்கப்பட்ட அவர் ஏறத்தாழ 30 ஆண்டுகள் மாவட்டச் செயலராக பணியாற்றியுள்ளார். கடந்த 1986 முதல் 89-ம் ஆண்டு வரை தூத்துக்குடி நகராட்சித் தலைவராகவும், 1989 மற்றும் 1996 ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
மறைந்த என். பெரியசாமிக்கு எபநேசர் என்ற மனைவியும், தற்போது தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள கீதா ஜீவன் மற்றும் மிசிதா என்ற மகள்களும்,ராஜா, ஜகன், அசோக் என்ற மூன்று மகன்களும் உள்ளனர்.
பெரியசாமி மறைவையொட்டி வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு திமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கும். திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் இரங்கல்: என்னுடைய முரட்டுப் பக்தன் என்று கருணாநிதியால் பாசத்துடன் அழைக்கப்பட்ட பெரியசாமியின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். திமுகவின் போர்க்குணமிக்க மாவட்டச் செயலாளராகத் திகழ்ந்தவர். 30 ஆண்டுகள் திமுகவின் மாவட்டச் செயலாளராக விளங்கிய அவர் திமுகவுக்காகவும், மக்களுக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். அவர் பிரிந்தாலும் அவரிடம் உள்ள திமுக உணர்வு தலைமுறை தலைமுறையாக கட்சியினரிடம் தங்கி நிற்கும் என்று இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், இந்திய யூனியன் முஸ்லிக் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் உள்ளிட்ட தலைவர்களும் பெரியசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.