முகப்பு
தமிழ்நாடு

நடிகை அனுஷ்கா பயன்படுத்திய கேரவன் சொகுசு வாகனம் பறிமுதல்

பொள்ளாச்சி அருகே நடிகை அனுஷ்கா பயன்படுத்தி வந்த கேரவன் சொகுசு வாகனம், உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:38 PM
பகிர்:

பொள்ளாச்சி அருகே நடிகை அனுஷ்கா பயன்படுத்தி வந்த கேரவன் சொகுசு வாகனம், உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் படப்பிடிப்புகள் அவ்வப்போது நடைபெறும். இதற்காக, பல முன்னணி நடிகர், நடிகைகள் இங்கு வந்து செல்வர்.
இந்நிலையில், மலையாள நடிகர் உன்னிமுகுந்தன், நடிகை அனுஷ்கா உள்ளிட்டோர் நடிக்கும் பாகமதி என்ற தெலுங்கு படத்தின் பாடல் காட்சிப் படப்பிடிப்பு, பொள்ளாச்சி அருகே காளியாபுரத்தில் கடந்த சில நாள்களாக நடைபெற்றுவந்தது.
படப்பிடிப்பு முடிந்த நிலையில், நடிகை அனுஷ்கா பயன்படுத்திய கேரவன் சொகுசு வாகனத்தில் சில குறைபாடுகள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. பொள்ளாச்சியில் அதை சரிசெய்வதற்காக ஓட்டுநர் அந்த வாகனத்தை ஆனைமலை வழியாக செவ்வாய்க்கிழமை இரவு ஓட்டி வந்துள்ளார்.
அப்போது, ஆனைமலை அருகே நஞ்சேகவுண்டன்புதூர் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாமாபிரியா தலைமையிலான அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த அதிகாரிகள், இந்த கேரவன் சொகுசு வாகனத்தை நிறுத்தி, சோதனையிட்டனர். உரிய ஆவணங்கள் இல்லை எனத் தெரிய வந்ததை அடுத்து, அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். கேரவன் வாகனத்துக்கான அனுமதி ஆவணங்கள் இல்லாமலும், வரி செலுத்தாமலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கேரவன் சொகுசு வாகனத்தின் உரிமையாளர் இளங்கோவன், அதன் ஓட்டுநர் திருப்பதி ஆகியோரிடம் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.