ஜிஎஸ்டியால் சபரிமலை வேட்டி, துண்டு வர்த்தகம் பாதிப்பு
ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக சபரிமலை வேட்டி, துண்டு வர்த்தகம் 30 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக சபரிமலை வேட்டி, துண்டு வர்த்தகம் 30 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய ஜவுளிச்சந்தை ஈரோட்டில் இயங்கி வருகிறது. வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு முதல் புதன்கிழமை மாலை வரை இச்சந்தை நடைபெற்று வருகிறது. தீபாவளி, ரமலான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் இச்சந்தையில் வியாபாரிகள் கூட்டம் களைகட்டும்.
தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்ய ஈரோடு சந்தைக்கு வருவது வழக்கம்.
ஒவ்வோர் ஆண்டும் சபரி மலை சீசன் தொடங்கும்போது வெளியூர் மற்றும் வெளி மாநில மொத்த வியாபாரிகள் கறுப்பு, நீலம் வேட்டி, துண்டுகளை உற்பத்தி செய்ய ஈரோடு சந்தையில் உள்ள உற்பத்தியாளர்களிடம் ஆர்டர் கொடுப்பது வழக்கம். அதேபோல சந்தை நடைபெறும் நாள்களில் சில்லறை வியாபாரிகள் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து இவற்றை கொள்முதல் செய்து செல்வார்கள்.
இந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி கார்த்திகை முதல் நாள் என்பதால், தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களிலும், ஐயப்ப பக்தர்கள் விரதம் மேற்கொள்ள தயாராகி வருகின்றனர். அப்போது ஐயப்ப பக்தர்கள் கறுப்பு, காவி, நீலம் ஆகிய நிறத்திலான வேட்டி, துண்டு அணிந்து விரதத்தை தொடர்வார்கள்.
கார்த்திகை மாதம் தொடங்க இன்னும் சில நாள்களே இருப்பதால், தற்போது, ஈரோட்டில் ஐயப்ப பக்தர்களுக்கான வேட்டி, துண்டு, தோள் பைகள் தயாரிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து ஐயப்ப பக்தர்களுக்கான துணி வகைகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் கூறியதாவது:
வழக்கமாக கார்த்திகை மாதம் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே, பக்தர்கள் பயன்படுத்தக் கூடிய வேட்டி, துண்டுகளுக்கான ஆர்டர்கள் தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்து குவியும்.
ஆனால் நடப்பு ஆண்டு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக கடந்த ஆண்டை விட 30 சதவீதம் வரை ஆர்டர் குறைந்துள்ளது. மேலும், ஸ்கிரீன் பிரிண்டிங் முறையில் பெயர் அச்சிடப்படும் வேட்டி ரூ. 145, துண்டு ரூ. 60, பைகள் ரூ. 80 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. வெறும் பார்டர்கள் மட்டுமே அச்சிடப்பட்ட வேட்டி மற்றும் துண்டு ரூ. 65 முதல் ரூ. 190 வரை விற்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட ரூ. 5 முதல் ரூ. 20 விலை உயர்ந்துள்ளது என்றனர்.