எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான இடத்தை மாற்றக் கோரி மனு: ஆட்சியர் பரிசீலிக்க உத்தரவு
ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் இடத்தை மாற்றக் கோரிய மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்ற
ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் இடத்தை மாற்றக் கோரிய மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக. ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
ராமநாதபுரம் நகராட்சியில் பொதுமக்களின் பொழுதுபோக்குக்காக பல்வேறு வசதிகளுடன்கூடிய அம்மா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவைத் தவிர்த்து பொதுமக்களின் பொழுதுபோக்கு மற்றும் நடைபயிற்சிக்கான இடங்கள் எதுவும் இல்லை.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் வரும் 25 -ஆம் தேதி நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அம்மா பூங்காவைத் தேர்வு செய்துள்ளனர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளும் பெரும் கூட்டத்தாலும், அதற்கான கட்டமைப்பு பணிகளாலும், பல லட்சம் ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்ட பூங்காவின் கட்டமைப்பு சிதைந்துவிடும். பொதுமக்களின் பயன்பாடும் சில நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்படும். எனவே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் இடத்தை மாற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம். வேணுகோபால், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கைக்கு 2 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.