தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலராக ரைமண்ட் மீண்டும் நியமனம்
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைச் செயலராக பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைச் செயலராக பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்புக்குழுச் செயலராக நியமிக்கப்படுபவர் முழுப் பொறுப்பேற்று கலந்தாய்வை நடத்துவார்.
இப்பொறுப்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு இறுதி வரை, அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியரும் ராமானுஜம் கம்யூட்டர் மைய இயக்குநருமாக இருந்த ரைமண்ட் வகித்துவந்தார்.
இந்நிலையில் 2015 டிசம்பரில் அவர் திடீரென மாற்றப்பட்டு, அந்தப் பொறுப்புக்கு பல்கலைக்கழக பேராசிரியர் இந்துமதி நியமிக்கப்பட்டார். இவருடைய தலைமையில் 2016-17 மற்றும் 2017-18 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான பொறியியல் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
ஆன்-லைன் கலந்தாய்வு: பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்களும், பெற்றோரும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அலைக்கழிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், 2018-19-ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் கலந்தாய்வு ஆன்-லைனில் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் மாணவர்கள் அவரவர்களின் ஊரில் இருந்தபடியே, அரசு அறிவிக்கும் மையத்தில் அல்லது பொறியியல் கல்லூரிகளில் ஆன்-லைனிலேயே பி.இ. இடங்களைத் தேர்வு செய்து சேர்க்கை பெறமுடியும்.
செயலர் மாற்றம்: அடுத்த ஆண்டு முதல் ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடத்தப்பட உள்ள நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்கான ஒருங்கிணைப்புக் குழுவையும் தமிழக அரசு புதிதாக அமைத்து அதற்கான அரசாணையை வியாழக்கிழமை வெளியிட்டது.
அதன்படி, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைச் செயலராக தற்போது அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி. வளாகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியராக பணியாற்றி வரும் ரைமண்ட் உத்தரியராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2018-19 கல்வியாண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் வகிப்பார் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.