வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை அண்மையில் தீவிரம் அடைந்தது. இதன் விளைவாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்தது. தற்போது மழை குறைந்துள்ளது. தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களில் வியாழக்கிழமை (நவ.9) வறண்ட வானிலையே காணப்பட்டது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பு: அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு கேரளப் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அங்கிருந்து நகர்ந்துவிட்டது.
அந்தமானை ஒட்டியுள்ள மலேசிய கடல்பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதாலும், வெப்பச் சலனம் காரணமாகவும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.