சட்ட விரோத தொலைபேசி இணைப்பக வழக்கு: மாறன் சகோதரர்களின் மனுவுக்கு சிபிஐ எதிர்ப்பு!
சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை: சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் ஒன்றை உருவாக்கியதன் மூலம் அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு உண்டாக்கியதாக மாறன் சகோதரர்கள் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கானது இன்று சிபிஐ வழக்குக்களுக்கான 15-ஆவது கூடுதல் நீதிபதி நடராசன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் கூடுதல் பிரமாணப் பத்திரம் ஒன்றையும் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
Advertisement
அதில் மாறன் சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு தேவையான அளவு ஆதாரங்களும் ஆவணங்களும் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனவே தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகிய இருவரும் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவினை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
சிபிஐயின் புதிய கூடுதல் பிரமாணப் பத்திரத்துக்கு பதிலளிக்க மாறன் சகோதரர்களின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அவகாசம் கேட்டதால், வழக்கை 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.