நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நாளை புதுவை அரசைப் போல தமிழக அரசும் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் வலியுறுத்தினார்.
நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு கலை, பண்பாட்டுத் துறை சார்பில் நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் 95}ஆவது நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், அதன் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட ஏராளமான திரைப்பட, நாடகக் கலைஞர்கள் சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இதன்பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கரதாஸ் சுவாமிகளின் இரண்டாம் பதிப்பு நினைவு புத்தகத்தை பொன்வண்ணன் வெளியிட்டார்.
மேலும், புதுச்சேரியில் உள்ள சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவிடத்தை புதுப்பிக்க தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. முன்னதாக, புதுவை மாநில திரைப்பட, நாடக சங்கத்தினர் 100}க்கும் மேற்பட்டோர் ஈஸ்வரன் கோயிலில் இருந்து இசை வாத்தியங்களை வாசித்தபடியும், தெருக்கூத்து ஆடியும் ஊர்வலமாக சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவிடத்தில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் நடிகர் சங்கத் தலைவர் நாசர் கூறியதாவது:
தமிழ் நாடகக் கலையை வேறு ஒரு தளத்துக்குக் கொண்டு சென்றவர் சங்கரதாஸ் சுவாமிகள். ஆண்டுதோறும் அவரது நினைவு தினத்தை புதுவை அரசு சிறப்பாக முன்னெடுத்து வருவது போல தமிழக அரசும் முன்னெடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் சங்கரதாஸ் சுவாமிக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடகக் கலைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் நாசர்.