ராமேசுவரம் மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து வழக்குத் தாக்கல் செய்தால் அதை வரும் வெள்ளிக்கிழமை (நவ.17) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜரான வழக்குரைஞர் மெளரியா, இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இந்திய கடலோரக் காவல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுநாள் வரை இலங்கை கடற்படையினர் தான் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றனர். இப்போது இந்திய கடலோரக் காவல் படையினரும் தாக்குதல் நடத்தத் தொடங்கிவிட்டனர்.
எனவே, இந்தச் சம்பவம் குறித்து வழக்குத் தொடர இருப்பதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையிட்டார்.
அவரது முறையீட்டுக்கு பதிலளித்த நீதிபதிகள், இந்தச் சம்பவம் குறித்து வழக்குத் தாக்கல் செய்தால், அதை வரும் வெள்ளிக்கிழமை (நவ.17) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறினர்.