பெங்களூரு: அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு பரோல் வழங்கலாமா என்று தமிழக காவல்துறையிடம் கர்நாடகா ஆலோசனை கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு காலம் சிறை தணடனை பெற்றுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளரான சசிகலா தற்பொழுது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் தற்பொழுது அவரது கணவரான நடராசன் சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். இதன் காரணமாக அவரை பார்க்கும் பொருட்டு 15 நாட்கள் அவசர பரோல் கேட்டு சசிகலா சார்பில் சிறை நிர்வாகத்திடம் இன்று காலை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சசிகலாவுக்கு பரோல் வழங்கலாமா என்று தமிழக காவல் துறையிடம் கர்நாடகா ஆலோசனை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக் கண்காணிப்பாளர் சென்னை காவல்துறை ஆணையருக்கு கடிதமொன்றினை எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு பரோல் வழங்கலாமா? அவ்வாறு அவருக்கு பரோல் வழங்கப்படுவதாக இருந்தால் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க இயலுமா? அவரது கணவர் நடராசன் உடல்நிலை தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மைதானா?
இவ்வாறு அந்த கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.