டெங்குவை ஒழிக்க தமிழக அரசு தவறிவிட்டது என செங்கல்பட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்தார். பின்னர், அவர்களுக்கு ரொட்டி, பழங்களை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குப்பைகளை அகற்றி சுகாதாரமாக வைத்திருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எடுத்திருந்தால் டெங்குவை கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால் டெங்குவை ஒழிக்க தமிழக அரசு தவறிவிட்டது.
டெங்குவை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல், மக்கள் மீது அக்கறை இல்லாத தமிழக அரசு நீடிக்கக்கூடாது என்பதே மக்களின் விருப்பம். சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவரது நடவடிக்கை சரியில்லை. டெங்குவைத் தடுக்க அவர் எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. நான் ஆர்.கே. நகர் தொகுதி
தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று மட்டும் தான் கூறினேன்.
யாருக்கும் ஆதரவும் இல்லை. ஆனால், உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்றார். முன்னதாக, செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம், பஜார் வீதி அருகே டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கினார். பின்னர், புதிய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீரை வழங்கினார்.
முன்னாள் எம்எல்ஏ அனகை டி.முருகேசன், மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதி, செங்கல்பட்டு நகரச் செயலாளர் சி.எம்.ஏ.ரவி, அவைத் தலைவர் நாகராஜ், பொருளாளர் சி.எம்.என்.பிரகாஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.