சென்னை: தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா மரணத்தில் மர்மம் உள்ளதால் சிபிஐ விசாரணை தேவை என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி இன்று காலை அவருடைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக நினைக்கிறோம். எனவே இது குறித்து தமிழக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அல்லது சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
இதில் நிறைய சந்தேகங்களும் மர்மங்களும் ஒளிந்துள்ளதாக எண்ணுறோம். தகுந்த விசாரணை நடைபெறும் பொழுது உரிய ஆதாரங்களை எங்களால் வழங்க முடியும்.
நீட் எதிர்ப்பாளர்களின் தொடர் அழுத்தமே மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். உச்ச நீதிமன்றத்தின் அனுதாபத்தினைப் பெற வேண்டும் என்ற நோக்கில் அனிதாவினை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக செயல்படும் தேச விரோத சக்திகளே அனிதா மரணத்துக்கு காரணம்.
தமிழகத்தில் மருத்துவக் கல்வியின் தரத்தினை உயர்த்தும் பொருட்டுதான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்த போதும்,பாடத்திட்டத்தின் தரத்தினை உயர்த்தாத திமுக மற்றும் அதிமுக கட்சிகளும் இதற்கு காரணம்.
இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்தார்.