என்னையும், ஊடகங்களையும் மிரட்டும் வகையில் முதல்வர் நாராயணசாமி போக்கு அமைந்துள்ளது என புதுவை மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
சென்டாக் மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி, சிபிஐ விசாரணைக்கு கிரண் பேடி பரிந்துரை செய்திருந்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, புதுவை அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்பதற்காக அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளிக்க ஆளுநர் நிர்ப்பந்தம் செய்கிறார். தேவைப்பட்டால் அவர் மீது அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்படும்.
ஆளுநர் சமூக வலைதளத்தில் பதிவிடும் செய்திகளையும், தவறான தகவல்களையும் வெளியிடும் பத்திரிகையாளர்களும் இதில் அடங்குவர் என்றார்.
இதுதொடர்பாக கிரண் பேடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
என்னையும், ஊடகங்களையும் மிரட்டும் வகையில் முதல்வரின் போக்கு அமைந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டப் பதவியான ஆளுநர் பதவியே மிரட்டலுக்கு ஆளாகியுள்ளது. புதுவை அரசின் 6 மூத்த அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக தலைமைச் செயலரை அழைத்து விளக்கம் கேட்காமல், தங்கள் பணியைச் சீராக செய்தமைக்காக ஆளுநரையும், ஊடகங்களையும் முதல்வர் மிரட்டுகிறார்.
ஒவ்வோர் அரசு அதிகாரிக்கும் ஆண்டு செயல்பாட்டு தகுதிச் சோதனை இருப்பது போல, ஏன் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் இருக்கக் கூடாது? தங்கள் பிரதிநிதிகளின் ஆண்டு செயல்பாடு அறிக்கையை அறிய உரிமை இருக்கிறது என்றார் அவர்.