ஓபிஎஸ், இபிஎஸ் இல்லாத அதிமுக ஆட்சி அமைப்பதே தங்களது நோக்கம் என்று திருவண்ணாமலையில் அதிமுக (அம்மா) அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் கூறினார்.
திருவண்ணாமலையில் புதன்கிழமை இரவு அதிமுக (அம்மா) அணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்வது சரியல்ல. ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து செய்வதுதான் அதிமுகவினரின் கடமை.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையம் மூலம் நேர்மையாக விசாரணை நடக்கும் என்று நம்புகிறேன். ஓபிஎஸ், இபிஎஸ் இல்லாத அதிமுக ஆட்சி அமைப்பதே எங்களது நோக்கம்.
முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி ஆகியோர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்ய தமிழக அரசு முயற்சிக்கிறது. இவர்கள் எல்லாம் முன் ஜாமீன் பெற்றுள்ளனர். அதனால் தான் தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சி முன் ஜாமீன் ஆட்சி என கூறுகிறேன் என்றார் அவர். தொடர்ந்து, கர்நாடக மாநில அதிமுக (அம்மா) அணியைச் சேர்ந்த புகழேந்தி கூறியதாவது:
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் மூலம் நேர்மையான விசாரணை நடைபெறும் என்ற நம்பிக்கையில்லை.
மருத்துவமனையில் ஜெயலலிதாவைப் பார்த்ததாக அமைச்சர்கள் சிலர் மாறி மாறி வெவ்வேறு கருத்துகளைக் கூறுகின்றனர். தமிழகம் தற்போது சுரண்டப்படுகிறது. நடிகர் கமல் சொல்வதைப் போல தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடக்கவில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.