காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை (ஏப்ரல் 5) மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் கடந்த 3 நாட்களாக மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.அன்பழகன் தலைமை ஏற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் மற்றும் ஆளுநரின் ஆதரவு காரணமாகவே தற்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. ரூ.50 கோடி அளித்து அதிமுக எம்எல்ஏ- களை விலைக்கு வாங்கி ஆட்சியை கலைத்து விடலாம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அப்போதே தெரிவித்தேன் என்றார்.