தமிழினப் பல்கலைக் கழகம்’ என்று அழைக்கலாம்: கி.வீரமணிக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம்
பல்வேறு துறைகளிலும் சளைக்காமல் செயல்படும் கி.வீரமணி அவர்களை ‘தமிழினப் பல்கலைக் கழகம்’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்ஸ் சூட்டியுள்ளார்.
சென்னை: பல்வேறு துறைகளிலும் சளைக்காமல் செயல்படும் கி.வீரமணி அவர்களை ‘தமிழினப் பல்கலைக் கழகம்’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்ஸ் சூட்டியுள்ளார்.
02-12-2018 ஞாயிறு அன்று தனது 86வது பிறந்தநாள் விழாவை காணும், திராவிடர் கழக தலைவர் வீரமணியை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பெரியார் திடலில் நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அப்போது, திமுக பொருளாளர் துரைமுருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Advertisement
Advertisement
பின்னர் வீரமணிக்கு வாழ்த்து தெரிவித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:
திராவிடர் கழகத்தின் தலைவர் ஐயா ஆசிரியர் அவர்களுக்கு இது 86 ஆவது ஆண்டு பிறந்த நாள். ஒன்பது வயதில் இருந்தே மேடையில் பேசத் தொடங்கியவர். 11 வயதிலேயே சேலம் நீதிக்கட்சி மாநாட்டில் பேசியவர். இளம் வயதில் இவர் பேசியதைக் கேட்ட அண்ணா அவர்கள் திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர் என்று பாராட்டினார். நல்ல வருமானம் தந்து வந்த வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு பெரியார் அழைப்பை ஏற்று விடுதலை நாளிதழின் ஆசிரியர் ஆனார். 55 ஆண்டுகளாக அதன் ஆசிரியராக திறம்பட செயலாற்றி வருகிறார்.
மிசா சிறைவாசியாக சென்னை சிறையில் நானும் ஆசிரியரும் ஓராண்டு காலம் இருந்தோம். அவரும் தாக்கப்பட்டார். இதுவரை 52 முறை சிறை சென்றுள்ளார். படிப்பது, எழுதுவது, பிரச்சாரம் பயணம் பத்திரிக்கை பணி, கல்விப்பணி என்று சளைக்காமல் செயல்படும் ஆசிரியரை ‘தமிழினப் பல்கலைக் கழகம்’ என்று அழைக்கலாம்.
பொதுவாக எந்தப் பிரச்னையாக இருந்தாலும் திராவிடர் கழகம் என்ன சொல்கிறது ஆசிரியர் என்ன அறிக்கை கொடுக்கிறார் என்று தான் கலைஞர் அவர்கள் உற்று கவனிப்பார்கள். அப்படித்தான் நாங்களும் கவனிக்கிறோம். நாங்கள் செல்லும் பாதையை பெரியார் திடல் தான் தீர்மானிக்கிறது. மதவாத ஆபத்தும் சாதிவெறியும் தலைதூக்கும் இந்தக்
காலக்கட்டத்தில் ஆசிரியரின் வழிகாட்டுதல்கள் அதிகம் தேவை, அவருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.