தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2ஆவது அலகில் பராமரிப்புப் பணிக்காக ஞாயிற்றுக்கிழமை உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டது. ஏற்கெனவே, 4ஆவது அலகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 420 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன.
இதன்மூலம் தினமும் ஏறத்தாழ 1,050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், அடிக்கடி ஏற்படும் பழுதுகளால் மின் உற்பத்தி முழு அளவை எட்டாத நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில், ஆண்டுதோறும் நடத்தப்படும் 15 நாள் பராமரிப்புப் பணிக்காக 2ஆவது அலகில் ஞாயிற்றுக்கிழமை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஏற்கெனவே, 15 நாள் பராமரிப்புப் பணிக்காக கடந்த 28 ஆம் தேதி முதல் 4ஆவது அலகில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு அலகுகள் இயங்காத நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரப்படி ஏறத்தாழ 600 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.