ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பேரணியில், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் முறையாக வாகன உரிமம் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும் இருசக்கர வாகனத்தில் சென்று மோட்டார் வாகன சட்டத்தை மீறியுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை டிச.,17 க்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மேலும், மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கடந்த நவம்பர் 8ஆம் தேதி மதுரையில் தியேட்டர் முன்பு போராட்டம் நடத்தி பொது சொத்துக்கு பங்கம் விளைவித்தது குறித்து அவருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.