சென்னை: "அண்ணன் என்னடா? தம்பி என்னடா?" என்ற பாடலைப் பாடி ஓபிஎஸ் சகோதரர் நீக்கம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் சகோதரர் ராஜா நீக்கப்படுவதாக ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் கூட்டாக புதன் மலை அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கட்சியின் கொள்கைக்கு முரணாகவும் குறிக்கோளுக்கு விரோதமாகவும் நடந்து கொண்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் மற்றும் களங்கம் உண்டாகும் வகையிலான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டதாலும், ஓ. ராஜா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட்ட அனைத்து பொறுப்புகளிலும் நீக்கப்படுகிறார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் "அண்ணன் என்னடா? தம்பி என்னடா?" என்ற பாடலைப் பாடி ஓபிஎஸ் சகோதரர் நீக்கம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாகவும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
கட்டுக்கோப்பான கட்சியின் விதியை யார் மீறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் இது ஒரு முன்னுதாரணம் .
அண்ணனாக இருந்தாலும் சரி, தம்பியாக இருந்தாலும் சரி கட்சி விரோத செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். அப்போது அவர் "அண்ணன் என்னடா? தம்பி என்னடா? அவசரமான உலகத்திலே?" பாடலைப் பாடினார்.
கஜா புயலால் இந்த வருடம் அ.தி.மு.க. கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப் போவது இல்லை. கஜா புயல் நிவாரணப் பணிகளில் எந்த முறைகேடும் இல்லை. பணிகள் புயல் வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கஜா புயல் நிவாரணத்திற்குதமிழக அரசு மலையளவு நிதியை கேட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு எலுமிச்சை அளவு நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.