முகப்பு
தமிழ்நாடு

வேலியே பயிரை மேய்ந்த கதை: மதுரை கொள்ளைச் சம்பவத்தில் சிஆர்பிஎஃப் வீரர் கைது

மதுரை மாவட்டம், மேலூர் மருத்துவர் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை (சிஆர்பிஎஃப்) வீரரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

மதுரை மாவட்டம், மேலூர் மருத்துவர் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை (சிஆர்பிஎஃப்) வீரரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

மேலூர் காந்தி பூங்கா பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவர் பாஸ்கரன் (64). கடந்த 6-ஆம் தேதி இவரது மனைவி மீரா மற்றும் வீட்டுப் பணிப்பெண், காவலாளி ஆகியோரை மர்ம கும்பல் துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டி, வீட்டில் இருந்த லட்சக்கணக்கான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றது.

இதுகுறித்த புகாரின் பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 4 பேரும், திங்கள்கிழமை 6 பேரும் என 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து ரூ. 40.10 லட்சம் ரொக்கம், கார், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய திருமங்கலத்தைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் குமாரை (34) தனிப்படை போலீஸார், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 1.40 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அவரை மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தினர். அதைத்தொடர்ந்து குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் பழனிவேலு உத்தரவிட்டார். 

மேலும் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், இந்த வழக்கில் தொடர்புடைய 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட குமார், தமிழக ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய கணபதியிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாதுகாப்புப் படையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர் ஒருவருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த கொள்ளைக் கும்பலுக்கு பல குற்றச் செயல்களில் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.