மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தீ விபத்து சிபிஐ விசாரணை தேவையில்லை: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிபிஐ விசாரணை தேவையற்றது என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிபிஐ விசாரணை தேவையற்றது என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தீ விபத்து நிகழ்ந்த பகுதிகளை திங்கள்கிழமை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.
தீ விபத்து குறித்தும், தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர், கோயில் தக்கார் உள்ளிட்டோர் துணை முதல்வரிடம் விளக்கினர்.
தீ விபத்து நடந்த வீரவசந்தராயர் மண்டபப் பகுதியை பார்வையிட்ட பின்னர் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியது:
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தீ விபத்து நிகழ்ந்த மண்டப பகுதியானது பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். ஆகம விதிப்படி 6 மாதங்களில் அப்பகுதி புதுப்பிக்கப்படும். தீ விபத்துக்கு அங்கிருந்த கடைகள் காரணம் எனத் தெரிய வந்தால், கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் கோயில்களில் தீ விபத்துகள் நிகழாத வண்ணம் ஆலயப் பாதுகாப்புக் குழு அமைக்கப்படும். கோயில்களை அரசே முறைப்படி பராமரிக்கும். தனியார் அமைப்புகளிடம் கோயில்கள் ஒப்படைக்கப்படமாட்டாது. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு தனி தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும்.
மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தற்போது உள்ளே கொண்டு செல்லப்படும் பொருள்கள் தணிக்கை செய்யப்பட்டே அனுமதிக்கப்படுகின்றன.
வருங்காலங்களில் கோயிலில் இருந்து வெளியே கொண்டு செல்லும் பொருள்களையும் தணிக்கை செய்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தீ விபத்தின் சேத மதிப்பு முழு ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும். தீ விபத்து குறித்து சிபிஐ விசாரணை தேவையற்றது.
தீ விபத்தால் ஆட்சிக்கு ஆபத்து என்பன போன்ற ஜோதிடத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றார்.