அவசர கதியில் திறந்திருக்க வேண்டாம்: டிடிவி தினகரன்
சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை அவசர கதியில் திறந்திருக்க வேண்டாம் என்றார் சென்னை ஆர்.கே. நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.டி.வி. தினகரன்.
சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை அவசர கதியில் திறந்திருக்க வேண்டாம் என்றார் சென்னை ஆர்.கே. நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.டி.வி. தினகரன்.
இதுதொடர்பாக அவர், செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை மேலும் கூறியது:
ஜெயலலிதா ஒரு தேசிய தலைவர். மிகப்பெரிய ஆளுமை. வரும் 24 -ஆம் தேதி அவரது பிறந்த நாளன்று தேசிய தலைவர்களை அழைத்து, பேரவையில் அவருடைய உருவப்படத்தை திறந்திருக்கலாம். இவ்வாறு அவசர கதியில் அவரது படத்தை திறந்திருப்பது கண்டிக்கத்தக்கது. வருங்காலத்தில் ஸ்டாலினுக்கு அரசியலில் வேலை இருக்காது.
எடப்பாடி அணியில் உள்ள எம்எல்ஏக்கள் பலரும் ஆட்சியை கலைத்துவிட வேண்டாம்; வேண்டாத அமைச்சர்களை நீக்கி விட்டு, ஆட்சியை நீங்களே தொடர வேண்டும் எனக் கூறினர். ஆனால், மக்கள் தேர்தலைத்தான் விரும்புகிறார்கள். தமிழக மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவரை, கட்சியின் பொதுச் செயலாளர் முதல்வராக முடிவு செய்வார். தேர்தலில் நின்றே நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் .
முதல்வராவதற்காக எம்எல்ஏ ஆகவில்லை : முதல்வராக வேண்டும் என்பதற்காக நான் எம்எல்ஏ ஆகவில்லை. ஒரு சவாலுக்காகத்தான் எம்எல்ஏ ஆனேன். அதிகாரத்தில் இருந்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதால்தான் அதிகாரம் கேட்கிறோம். ஜெயலலிதா ஆட்சி மீண்டும் வேண்டும் எனக் கருதியே 18 எம்எல்ஏக்கள் என்னுடன் உள்ளனர் என்றார் டிடிவி தினகரன்.
இந்த சந்திப்பின் போது, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ ரெங்கசாமி, மாவட்ட செயலாளர் மா. சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.