சென்னை: அரும்பாக்கத்தில் பெண்ணிடம் இருந்து செயின் பறிக்க முயன்ற பொழுது, பெண்ணை பைக்கில் தர தரவென்று இழுத்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரும்பாக்கத்தில் வீணா தோட்டம் பகுதியைச் சேர்ந்த மேனகா (37) . இவர் அங்குள்ள வள்ளுவர்நகர் பகுதியில் கடந்த 11-ஆம் தேதியன்று காலை 7.30 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த இரண்டு இளைஞர்களில் ஒருவர் மேனகாவின் கழுத்தில் இருந்த 13 சவரன் தாலிச் செயினை பறிக்க முயன்றார்.
ஆனால், தாலிச் செயின் அறுபடாததால், மேனகா சாலையில் விழுகிறார். இரு சக்கர வாகனம் வேகமாகச் செல்ல, அதன் பின்னால் அமர்ந்திருக்கும் கொள்ளையன் செயினுடன் மேனகாவையும் சாலையில் தரதரவென இழுத்துச் செல்கிறார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இறுதியாக செயின் அறுந்து கொள்ளையர்கள் தப்பித்துச் சென்றனர். இது குறித்து கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சென்னையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் குறிப்பிட்ட சம்பவத்தில் பெண்ணை பைக்கில் தர தரவென்று இழுத்துச் சென்ற நபர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற அந்த நபர் மீது ஏற்கனவே 11 வழக்குகள் உள்ளன. போலீசார் பிடிக்கும் பொழுது அவர் தப்பிக்க முயன்றதாகவும், இதனால் அவருக்குகாலில் காயம்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.