மனைவி, மகனை கொன்று கணவர் தற்கொலை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மனைவி மற்றும் மகனைக் கொன்று வியாழக்கிழமை கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மனைவி மற்றும் மகனைக் கொன்று வியாழக்கிழமை கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
சிங்கம்புணரியை அடுத்த எம்.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னையா மகன் முத்துப்பாண்டி (34). இவர் சிங்கம்புணரியில் மின்சாதனப் பொருள்கள் விற்பனைக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி பிரியா (26). இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து சௌமிய நாராயணன் என்ற 2 வயது மகன் உள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை காலை முத்துப்பாண்டி, தன் பெற்றோரையும், பிரியாவின் பெற்றோரையும் பட்டமங்கலம் கோயிலுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் கோயிலுக்குச் சென்று விட்டு பகல் 12 மணிக்கு முத்துப்பாண்டியின் வீட்டுக்கு வந்த போது, வெளியே கார் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் வீட்டின் இரு பக்க கதவுகளும் பூட்டப்பட்டிருந்தன. தட்டிப் பார்த்தும் கதவு திறக்கப்படாததால் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு பிரியா கத்திக்குத்துக் காயங்களுடன் இறந்து கிடந்தார். சௌமிய நாராயணன் விஷம் கொடுக்கப்பட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். மேலும் அங்கு முத்துப்பாண்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த சிங்கம்புணரி காவல் நிலைய போலீஸார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். சிவகங்கையில் இருந்து காவல் மோப்ப நாய் சாம்ராட் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர். திருப்பத்தூர் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜசேகர் தலைமையிலான போலீஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே முத்துப்பாண்டி, தனது மனைவி மற்றும் மகனை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டதற்கு கடன் தொல்லை காரணமா அல்லது குடும்பப் பிரச்னை காரணமா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.