திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே எரிவாயு குழாயில் சனிக்கிழமை கசிவு ஏற்பட்டு, வயல் முழுவதும் எண்ணெய் படலம் மிதந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
கூத்தாநல்லூர் அருகேயுள்ள கமலாபுரம், எருக்காட்டூரில், சிவசண்முகம் என்பவரது நிலத்தில், விவசாயி பொன்னுசாமி குத்தகை அடிப்படையில் சாகுபடி செய்துவருகிறார். இந்த வயலில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர் கடந்த 4 நாள்களுக்கு முன் அறுவடை செய்யப்பட்டது. இந்த வயலின் வழியே ஆறடி ஆழத்தில், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் எரிவாயு குழாய் பதித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த குழாயில் வெள்ளிக்கி ழமை இரவு தொடங்கி சனிக்கிழமையும் கசிவு ஏற்பட்டு, வயல் முழுவதும் எண்ணெய் படலம் மிதந்தது. இதைப் பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், இதுகுறித்து கிராம உதவியாளர் இளையராஜவிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த கூத்தாநல்லூர் வட்டாட்சியர் செல்வி, ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் நிகழ்விடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். பின்னர், எரிவாயு குழாயில் கசிவை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.