கட்சி சின்னம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கமல்!
வேறொரு அமைப்பின் சின்னத்தினை தனது கட்சி சின்னம் ஒத்திருக்கிறது என்று எழுந்த சர்ச்சைக்கு கமல் முற்றுப்புள்ளி வைத்தார்.
சென்னை: வேறொரு அமைப்பின் சின்னத்தினை தனது கட்சி சின்னம் ஒத்திருக்கிறது என்று எழுந்த சர்ச்சைக்கு கமல் முற்றுப்புள்ளி வைத்தார்.
நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் பொருட்டு மும்பை செல்வதற்காக கமல் திங்கள் மதியம் சென்னை விமான நிலையம் வந்தார். அப்பொழுது அவருடன் வேறு சிலருமிருந்தனர். செய்தியாளர்களிடம் அவர்களை அறிமுகம் செய்து பேசும் பொழுது கமல் கூறியதாவது:
ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக மும்பைக்கு போய்க் கொண்டிருக்கிறேன். அதற்கு முன்னர் மும்பையிலிருந்து இந்த நண்பர்கள் இங்கு வந்துள்ளனர்.
Advertisement
இந்த நண்பர்கள் மும்பையில் உள்ள 'செம்பூர் தமிழ்ப்பாசறை' என்ற அமைப்பினைச் சேர்ந்தவர்கள். கடந்த 21-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் சின்னமானது இவர்களது அமைப்பின் சின்னத்தை ஒத்திருப்பதாக கருத்துக்கள் வெளியானது.
எனவே எதிர்காலத்தில் எந்த விதமான சட்ட சிக்கல்களும் எழக் கூடாது என்பதால் அவர்கள் தாமாகவே மனமுவந்து சின்னத்தினை பயன்படுத்தும் முழு உரிமையினை எங்களுக்கு எழுதிக் கொடுத்துள்ளார்கள். இனி எந்த சிக்கலும் கிடையாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.