குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் ஆவடியில் நடைபெற்ற பாதுகாப்பு கனரக வாகனங்களின் இரண்டு நாள் கண்காட்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதனை 4 ஆயிரம் தொழில்முனைவோர் பார்வையிட்டு, தங்களுக்கு தேவையான விவரங்களை பெற்றுள்ளனர்.
இந்தக் கண்காட்சியில் 120 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பெரிய நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தன.
இதில் பல்வேறு அரசுத் திட்டங்கள், தொழில்நுட்ப மேம்பாட்டு நடைமுறைகள், வர்த்தகர்களின் பதிவுக்கான நடைமுறைகள், பொதுத் துறை நிறுவனங்களின் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொடர்பான கருத்தரங்குகள் நடைபெற்றன.
கண்காட்சி தொடர்பாக குறு, சிறு, நடுத்தர தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் உதவி இயக்குநர் கே.சிவராம பிரசாத் கூறும்போது, ' குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை, இந்திய பாதுகாப்பு மற்றும் அதைச் சார்ந்த அமைப்புகளுக்கு தேவையானப் பொருள்களை விநியோகிப்பவர்களாக மாற்ற வேண்டும் என்பதே இந்த கண்காட்சியின் நோக்கம். கண்காட்சியை 4 ஆயிரம் தொழில் முனைவோரும், பொறியியல் கல்லூரி மாணவர்கள் 400 பேரும் பார்வையிட்டுள்ளனர். இது, தொழில் முனைவோர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.