பொங்கல் சிறப்புப் பேருந்துகள் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்படும். அதற்கான முன்பதிவும் தொடங்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொங்கல் பண்டிகைக்கு மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஏதுவாக ஜன.11, 12, 13 தேதிகளில் 5,158 சிறப்புப் பேருந்துகள் உள்பட 11, 958 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் நாள்தோறும் வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகள் உள்பட ஜன.11-ஆம் தேதி 796, 12-ஆம் தேதி 1,980, 13-ஆம் தேதி 2,382 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஜன.4-ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 22 தொழிற்சங்கங்கள் ஜன.11-ஆம் தேதி இரவு வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஜன.11-ஆம் தேதியன்று இயக்கப்பட வேண்டிய 796 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
எனினும் ஏற்கெனவே அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய சுமார் 8 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர்.
அப்பயணிகளுக்கு உரிய ஏற்பாட்டை மேற்கொண்ட விரைவுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நீண்ட தொலைவு செல்லும் பேருந்துகளை இயக்க ஓட்டுநர்களை தயார் செய்து அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அந்த அதிகாரிகள் மேலும் கூறியது: ஜன.11-ஆம் தேதி அரசுப் பேருந்துகளில் செல்ல முன்பதிவு செய்த பயணிகளுக்காக காலை 10 முதல் மாலை 6 மணி வரை சுமார் 1,000 அரசுப் பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டன.
அதேபோன்று வெள்ளிக்கிழமை வெளியூர் செல்ல 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே அறிவித்தவாறு கோயம்பேடு இல்லாமல் தாம்பரம், சைதாப்பேட்டை, அண்ணாநகர், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்துள்ள 75-ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் வழக்கத்துக்கு அதிகமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஆன்-லைன் முன்பதிவு தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கும் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளதால் பேருந்து இயக்கம் சீராகும்.