பிப்ரவரி 24-ல் மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம்: கமல் முடிவு!
தனது அரசியல் பிரவேசத்திற்கு வலு சேர்க்கும் விதமாக பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று நடிகர் கமல் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: தனது அரசியல் பிரவேசத்திற்கு வலு சேர்க்கும் விதமாக பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று நடிகர் கமல் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் பிப்ரவரி 21-ஆம் தேதியன்று ராமேஸ்வரத்தில் கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தினை துவக்க உள்ளதாகவும், அன்றே தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியினை அறிவிக்க உள்ளதாகவும் நடிகர் கமல் முன்னதாக வார இதழ் ஒன்றில் தான் எழுதி வரும் கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை அவர் இன்று ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.
Advertisement
காலை 11 மணிக்குத் துவங்கிய ஆலோசனை மதியம் 1 மணி அளவில் நிறைவு பெற்றது. அந்த ஆலோசனையின் முடிவில், தனது அரசியல் பிரவேசத்திற்கு வலு சேர்க்கும் விதமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று நடிகர் கமல் முடிவு செய்துள்ளதாக, மதுரை மாவட்ட நற்பணி மன்றத் தலைவர் மன்னன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.