தமிழ்நாடு

ஜெயலலிதாவை சந்தித்தவர்கள் யார் யார்? விளக்கம் அளிப்பாரா தனிச்செயலராக இருந்த வெங்கட்ரமணன்

DIN

சென்னை: ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரின் தனிச் செயலராக இருந்த வெங்கட்ரமணன், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராகியுள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை வெங்கட்ரமணன் சந்தித்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. 

மேலும், அரசின் செயல்பாடுகள் குறித்து வெங்கட்ரமணன் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினாரா? ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதா? ஜெயலலிதாவை வேறு யாரெல்லாம் அரசு சார்பில் சந்தித்தார்கள்? என்பது போன்ற கேள்விகள் இவரிடம் எழுப்பப்படும் என்று கூறப்படுகிறது.

முதல்வராக இருந்த ஜெயலலிதா தான் எடுக்கும் முடிவுகள் குறித்து இவர்களிடம் கூறி ஆலோசனைகள் பெறுவதும், அனைத்து நடவடிக்கைகளையும் இவர்களுக்கு தெரிவிப்பதும் வழக்கம். 

எனவே, ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் இருந்த போது அரசு நிர்வாகத்தை செயல்படுத்தியது யார்? யார்? அவரை நேரில் சந்தித்தவர்கள் யார்? அமைச்சர்கள் யாரேனும் சந்தித்தனரா? அதிகாரிகள் யாரேனும் சந்தித்தனரா? என்பது குறித்தும் இவரிடம் இருந்து விளக்கம் பெறும் என்று கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2001 முதல் 2006ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்த போது அவரது செயலர்கள் நான்கு பேரில் ஒருவராகவும், 2011-2016 வரை முதல்வரின் தனிச் செயலராகவும் பதவி வகித்தவர் வெங்கட்ரமணன். 

2011ம் ஆண்டு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட போது தனது தனிச் செயலராக வெங்கட்ரமணனை நியமித்தார். இதையடுத்து அவர் 2012ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பிறகும், அவருக்கு பதவி நீட்டிப்பு செய்யப்பட்டு மீண்டும் வெங்கட்ரமணன் தனிச் செயலராக பதவி வகித்து வந்தார்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்று அவர் ராஜினாமா செய்யும் வரை முதல்வரின் தனிச் செயலராக வெங்கட்ரமணன் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT