ஆண்டுக்கு இரு முறை நீட் தேர்வு: ராமதாஸ் கண்டனம்
ஆண்டுக்கு இரு முறை கணினி மூலம் நீட் தேர்வு நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு இரு முறை கணினி மூலம் நீட் தேர்வு நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்காக தேசிய தேர்வு முகமை என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ள மத்திய அரசு, அதன் மூலம் அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு இரு முறை நீட் தேர்வு கணினி மூலம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்படும் இயக்கங்களைத் திசைத் திருப்பும் நோக்கம் கொண்டதாகவே தோன்றுகிறது.
ஆக்கப்பூர்வமான எந்த பயனையும் அளிக்காமல், ஊரக, ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை மட்டும் பறிக்கும் நீட் தேர்வு உடனடியாக நீக்கப்பட வேண்டும். இத்தேர்வு தொடர்பான முதன்மை வழக்கு இன்னும் விசாரிக்கப்படாமல், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இரு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள அந்த வழக்கை விரைவாக நடத்தி, சாதகமான தீர்ப்பைப் பெறுவதன் மூலம் தான் சமூக நீதியைப் பாதுகாக்க முடியும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.