ஏலகிரியில் விவசாயி வீட்டை சூறையாடிய ஒற்றை யானை
திருப்பத்தூரை அடுத்த ஏலகிரி மலை பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை ஆண் யானை விவசாயியின் வீட்டை சூறையாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருப்பத்தூரை அடுத்த ஏலகிரி மலை பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை ஆண் யானை விவசாயியின் வீட்டை சூறையாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் அருகே சுற்றுலா மையமான ஏலகிரி மலையில் மங்களம், நிலாவூர் கூட்டுச் சாலை ஆகிய மலைக் கிராமப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக ஒற்றை ஆண் யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து, திருப்பத்தூர் வனத் துறையினர் அங்கு முகாமிட்டு ஒற்றை யானையை விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் வனப்பகுதிகளிலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டத்தை தவிர்க்க வேண்டுமென தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்து வந்தனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மங்களம் செல்லும் வழியில் மொப்பவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராமனுக்குச் (55) சொந்தமான இரும்புக் கூரையால் வேயப்பட்ட மண் வீட்டையும், அங்குள்ள விவசாய நிலங்களையும் யானை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது. அப்போது ஜெயராமன் மற்றும் அவரது மனைவி மைலா ஆகியோர் அருகில் உள்ள தனது மகன் வீட்டில் தங்கியிருந்ததால் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்து வனத் துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். யானை தாக்குதல் குறித்து வனத் துறையினர் கூறுகையில், ஜவ்வாது மலை காப்புக் காட்டில் இருந்து வழிதவறி வந்த ஒற்றை யானை, ஞாயிற்றுக்கிழமை இரவு தானாகவே ஏலகிரி மலை காப்புக் காட்டை விட்டுச் சென்று விட்டது.
இனிமேல் ஏலகிரி மலைப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமின்றி இருக்கலாம் எனத் தகவல் தெரிவித்தனர்.
யானையால் சேதப்படுத்தப்பட்ட வீடு.