தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, கலவரம்: தடயங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தின்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் கலவரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் சேகரித்த தடயங்கள் கோவில்பட்டி குற்றவியல்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தின்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் கலவரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் சேகரித்த தடயங்கள் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மே 22-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட மக்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் ஈடுபட்டனர். அதுபோல, 23ஆம் தேதியும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், 13 பேர் உயிரிழந்தனர்.
இந்தக் கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. மாரிராஜன் தலைமையில், 10 டி.எஸ்.பி.க்கள் உள்பட 100 அதிகாரிகள் கடந்த ஜூன் 23ஆம் தேதி தூத்துக்குடி வந்தனர். சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பல பிரிவுகளாக பிரிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஸ்டெர்லைட் குடியிருப்பு, அண்ணா நகர், திரேஸ்புரம், வி.வி.டி. சிக்னல் உள்பட பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர். இந்நிலையில், உயிரிழந்த 13 பேர் அணிந்திருந்த உடைகள் மற்றும் அவர்கள் மீது பாய்ந்த குண்டுகள் உள்பட பல்வேறு தடயங்களை சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் உலகராணி தலைமையில் போலீஸார் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் (எண் 1) நடுவர் சங்கரிடம் ஒப்படைத்தனர். அவர் ஒப்படைக்கப்பட்ட பொருள்களை சென்னையில் ரசாயனப் பரிசோதனை கூடத்துக்கு அனுப்ப உத்தரவிட்டார்.