போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதத் தொகையைக் கட்ட பணமில்லா இ-சலான் முறை அறிமுகப்படுத்தப்பட்டு சரியாக 60 நாட்களில், அபராதம் மூலம் கிடைத்த வருவாய் ரூ.2.65 கோடியாக உள்ளது.
ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுவோர், சாலை விதிகளை மீறுவோருக்கு ஸ்பாட் ஃபைன் விதிக்கும் முறையை மாற்றி, பணமற்ற, இ-சலான் முறை கடந்த மே மாதம் 10ம் தேதி சென்னை போக்குவரத்துக் காவல்துறையால் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நடைமுறை பின்பற்றத் தொடங்கி 60 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை பொதுமக்கள் மீது 2.65 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதன்படி ரூ.2.68 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கக் கொண்டு வரப்பட்ட இந்த நடைமுறையில், அபராதத் தொகையை பொதுமக்கள் டெபிட்/கிரெடிட் கார்ட், பேடிஎம் அல்லது எஸ்பிஐ ஆன்லைன் அல்லது இ-சேவை மையங்கள் மூலமாக செலுத்த வழிவகை செய்யப்பட்டது.
அதிவேகமாக வாகனத்தை இயக்குவது, போக்குவரத்து விதியை மீறுவது, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாதது உள்ளிட்ட வழக்குகளுக்கு இ-சலான் மூலம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் குடித்துவிட்டு வாகனத்தை இயக்குபவர்கள் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து அபராதம் வசூலிக்க முடியாது. ஏன் என்றால், இந்த குற்றத்துக்கு நீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்து அபராதம் செலுத்த வேண்டும். அந்த வகையில் சுமார் 7,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை மக்கள் வரவேற்பதாகவும், அபராதம் செலுத்திய 90 சதவீதம் பேர், பணமற்ற முறையில் அபராதம் செலுத்த தாமாக முன்வந்ததாக போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.