ரயில் நிலையங்களில் சிறந்த ஓவியம் வரையும் போட்டியில், இரண்டாம் பரிசு பெற்ற மதுரை ஓவியர்களுக்கு ரூ.5 லட்சம் ரொக்கம், பாராட்டு சான்றிதழை தில்லியில் வியாழக்கிழமை நடந்த விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வழங்கினார்.
ரயில் நிலையங்களில் ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்த ரயில்வே வாரியம் உத்தரவிட்டிருந்தது. அத்துடன் சிறந்த ஓவியங்களுக்கு பரிசு வழங்குவதாகவும் அறிவித்திருந்தது.
தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் அழகுப்படுத்தும் பணியில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் நீனு இட்டியேரா ஆலோசனையின்பேரில் மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் உள்ளூர் ஓவியர்களைக் கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டன.
நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் வரையப்பட்ட ஓவியங்களில் சிறந்தவற்றை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இதில், மதுரை ரயில் நிலையத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் இரண்டாம் பரிசுக்குரியதாகத் தேர்வு செய்யப்பட்டன.
இதற்கான ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மதுரை ஓவியர்கள் கண்ணன், ரமேஷ் ஆகியோர் வரைந்த ஓவியங்களுக்கு இப்பரிசுத் தொகை வழங்கப்பட்டது. தில்லி ரயில்வே வாரிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் இப்பரிசை, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மதுரை ஓவியர்களுக்கு வழங்கி பாராட்டினார்.
விழாவில் ரயில்வே துறை இணை அமைச்சர் ராஜன் கோஹெய்ன், ரயில்வே வாரிய தலைவர் அஸ்வனி லோஹானி ஆகியோர் பங்கேற்றனர்.