எனது கருத்துகள் தவறாக சித்திரிக்கப்படுகின்றன: நடிகர் ரஜினிகாந்த்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நான் தெரிவித்த கருத்துகள் தவறாக சித்திரிக்கப்படுகின்றன என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நான் தெரிவித்த கருத்துகள் தவறாக சித்திரிக்கப்படுகின்றன என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
இதுதொடர்பாக அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை இரவு கூறியது:
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக நான் கூறிய கருத்துகள் தவறாகச் சித்திரிக்கப்படுகின்றன. நான் பேசியதை இணையதளங்களில் பார்க்க முடியும். அதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
கர்நாடகத்தில் காலா' படத்தை அனைத்துத் தரப்பு மக்களும் பார்க்க விரும்புகின்றனர். எனவே, அதனை வெளியிட கர்நாடக முதல்வர் குமாரசாமி உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.
அரசியல் வேறு; சினிமா வேறு. எனது படத்துக்கு தற்போது எதிர்ப்பு குறைவாக இருப்பதாகவே உணர்கிறேன். படத்தில் நல்ல அம்சங்கள் இருந்தால்தான் மக்கள் வெற்றியடையச் செய்வார்கள்.
கர்நாடக முதல்வர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்து பேசியதில் எந்த தவறும் இல்லை, ஆரோக்கியமானதுதான்.
நீட் தேர்வு தோல்வியால் மாணவி உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. இதைத் தடுக்க நாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள் என்றார் ரஜினிகாந்த்.