கொள்ளுப் பேரனுடன் கிரிக்கெட் விளையாடிய கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி தனது கொள்ளுப் பேரனுடன் கிரிக்கெட் விளையாடிய விடியோ வெளியாகி உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி தனது கொள்ளுப் பேரனுடன் கிரிக்கெட் விளையாடிய விடியோ வெளியாகி உள்ளது.
மூச்சுத் திணறல் காரணமாக பாதிக்கப்பட்ட கருணாநிதி டிரக்யாஸ்டமி கருவி பொருத்தப்பட்டு, கோபாலபுரம் இல்லத்திலேயே கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஓய்வில் இருந்து வருகிறார். அந்தக் கருவியை அகற்றுவது குறித்து மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனர். கருணாநிதிக்குப் பேச்சு பயிற்சியும் அவ்வப்போது கொடுத்து வருகின்றனர்.
கிரிக்கெட் விளையாட்டு: இந்த நிலையில் கருணாநிதி அவரது கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் விடியோ வெளியாகி உள்ளது. நாற்காலியில் கருணாநிதி அமர்ந்தவாறு பிளாஸ்டிக் பந்தைப் போட, அருள்நிதியின் மகன் மகிழன் (கருணாநிதி மகன் தமிழரசுவின் பேரன்) (2) கிரிக்கெட் மட்டையால் அதை அடிக்க முற்படுகிறார். கருணாநிதியின் மகள் செல்வி, மகன் மு.க.தமிழரசு மற்றும் அவரது மனைவி ஆகியோர் பந்துகளைப் பொறுக்கி கருணாநிதியிடம் கொடுக்கின்றனர். அப்போது மகள் செல்வி, அப்பா (கருணாநிதி) 'நீங்கள் பெளலர், மகிழன் பேட்ஸ்மேன், நாங்கள் எல்லாம் பீல்டர்' எனக் கூறுகிறார். அதற்கு கருணாநிதி புன்முறுவல் பூக்கிறார்.
இந்த விடியோ திமுக தொண்டர்களால் பெரிதும் ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு வருகிறது.