வேத மந்திரங்கள் முழங்க சங்கர மடத்துக்குள் ஸ்ரீ ஜயேந்திரர் உடல் நல்லடக்கம்
வேத மந்திரங்கள், அபிஷேக ஆராதனைகளுடன் காஞ்சி காமகோடி பீடத்தின் 69ஆவது மடாதிபதி ஸ்ரீ ஜயேந்திரரின் உடல் இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம்: வேத மந்திரங்கள், அபிஷேக ஆராதனைகளுடன் காஞ்சி காமகோடி பீடத்தின் 69ஆவது மடாதிபதி ஸ்ரீ ஜயேந்திரரின் உடல் இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
காஞ்சி காமகோடி பீடத்தின் 69ஆவது மடாதிபதியும், ஹிந்து மதத்தின் ஆன்மிகப் பெரியவர்களில் முன்னோடியுமான காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று காலை 7.45 மணிக்கு சித்தியடைந்தார். அவருக்கு வயது 82.
மருத்துவமனையில் இருந்து சங்கர மடத்துக்குக் கொண்டு வரப்பட்டு, பூஜைகளுக்குப் பின்னர் மடத்தின் பிருந்தாவனத்துக்கு எதிரே அவர் பக்தர்களை சந்தித்து வந்த அறையில் பக்தர்களின் அஞ்சலிக்காக ஸ்ரீ ஜயேந்திரரின் உடல் வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, வேத மந்திரங்கள், அபிஷேக ஆராதனைகளுடன் ஸ்ரீ ஜயேந்திரர் உடல் இன்று காலை பிருந்தாவன பிரவேசம் நடைபெறும் என்று காஞ்சிபுரம் சங்கர மடம் நேற்று அறிவித்திருந்தது.
சித்தியடைந்த காஞ்சி மடாதிபதி ஸ்ரீ ஜயேந்திரர் உடலுக்கு இறுதிச் சடங்குகள் முடிவடைந்து, சங்கர மடத்துக்குள் உள்ள பிருந்தாவனம் பகுதியில் நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் இன்று காலை தொடங்கின.
முன்னதாக வேத மந்திரங்கள் முழங்க, அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அவர் அமர்ந்திருக்கும் அதே நாற்காலியில் வைத்து சங்கரமடத்தின் பிருந்தாவனம் பகுதியில் ஸ்ரீ ஜயேந்திரரின் பிருந்தாவன பிரவேசம் நடைபெற்றது.
ஸ்ரீ ஜயேந்திரர் உடலுக்கு நடைபெற்ற அபிஷேக ஆராதனைகளை பொதுமக்கள் காணும் வகையில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சங்கர மடத்தின் வளாகத்தில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு அதிலும் அபிஷேக ஆராதனைகளை பக்தர்கள் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ ஜயேந்திரருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.