தமிழ்நாடு

விஐபிகளுக்காக போக்குவரத்தை 10 நிமிஷத்துக்கு மேல் நிறுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

DIN

ஆளுநர், முதல்வர் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் வாகனங்கள் செல்வதற்காக பொதுமக்களின் வாகனங்களை 5 முதல் 10 நிமிஷங்களுக்கு மேல் நிறுத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் எஸ்.துரைசாமி தாக்கல் செய்த மனுவில், 'கடந்த பிப்ரவரி மாதம் நீலாங்கரையில் உள்ள ஒரு மருத்துவரைச் சந்திக்க அனுமதி வாங்கியிருந்தேன். எனது பணிகளை முடித்துக் கொண்டு அலுவலகத்திலிருந்து காரில் புறப்பட்ட என்னால், சுமார் ஒன்றரை மணி நேரம் பாரிமுனை சந்திப்பைக் கடக்க முடியவில்லை. தமிழக முதலவர் செல்வதாகக் கூறி வாகனங்களை போலீஸார் நிறுத்தி வைத்திருந்தனர். அன்றைய தினம் என்னால் மருத்துவரைச் சந்திக்க முடியவில்லை. 
எனவே, பொதுமக்களின் வாகனங்களை தேவையின்றி நிறுத்தி வைக்கும் போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் வி.இளங்கோவனும், அரசு தரப்பில் டி.என்.ராஜகோபாலனும் ஆஜராகி வாதிட்டனர்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: 
முக்கியப் பிரமுகர்களின் வாகனங்கள் தடையின்றி செல்ல, பொதுமக்களின் வாகனங்களை மணிக்கணக்கில் நிறுத்தி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 
ஆளுநர், முதல்வர் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் வாகனங்கள் செல்வதற்காக பொதுமக்களின் வாகனங்களை 5 முதல் 10 நிமிஷங்களுக்கு மேல் நிறுத்தி வைக்கக்கூடாது. 
அதேசமயம், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட உயர்பதவி வகிப்போர் முன்கூட்டியே தகவல் அளித்த பின்னர், எப்போதாவது சாலை மார்க்கமாக வருகின்றனர். அந்த சமயத்தில் பாதுகாப்பு கருதி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீஸாரின் நடவடிக்கைக்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது என குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT