தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து, மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
சென்னை எழிலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையரக வளாகத்தில் நிருபர்களுக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:-தென் தமிழக கடலோரப் பகுதிகளில் 45 முதல் 50 கிலோ மீட்டர் வரையிலும் குறிப்பாக சில நேரங்களில் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், தென் தமிழக கடலோர பகுதிகளில் மன்னார் வளைகுடா, குமரி கடல் மற்றும் தெற்கு கேரளம் போன்ற கடல் பகுதிகளில் மீனவர்கள் கண்டிப்பாகச் செல்லவேண்டாம் என ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.
ராமநாதபுரத்தில் அதிகபட்சமாக 8.82 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. திருநெல்வேலியில் 7.39 மி.மீட்டரும், சிவங்கையில் 5.34 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 0.25 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பலத்த காற்று வீசக் கூடும் என்பது குறித்த தகவல்களை நேரடியாக அனைத்து
மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் வருவாய்த் துறையின் மூலமாக தெரிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரியிலிருந்து சென்ற மீனவர்கள்: இதன் அடிப்படையில் கன்னியாகுமரியில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க 502 படகுகளில் சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்குத் திரும்பியிருக்கிறார்கள். இன்னும் மீதம் 51 படகுகள் கரை திரும்ப வேண்டி உள்ளது. ராமநாதபுரத்தில் 15 படகுகளில் கடலுக்குச் சென்றிருந்தார்கள். இந்த 15 படகுகளில் இருந்த மீனவர்களும் பாதுகாப்பாக கரை திரும்பி இருக்கிறார்கள். தூத்துக்குடியில் 135 படகுகளில் சென்றவர்களும் பாதுகாப்பாக கரைக்கு வந்திருகிறார்கள். இன்னும் 51 படகுகள் மட்டுமே வரவேண்டியுள்ளது.
மீன்வளத் துறை வருவாய்துறை ஆணையர்கள் மற்றும் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மீன்வளத்துறை இணைந்து இந்த பணியை மேற்கொண்டுள்ளனர் என்றார் அமைச்சர் உதயகுமார். இந்தப் பேட்டியின் போது, வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்யகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.