ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை இந்துக்கள் அரசியல் ரீதியாக புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ராமதாச மிஷன் சர்வதேச சங்கத்தின் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை கடந்த 13ஆம் தேதி அயோத்தியாவில் துவங்கியது. இந்த ரத யாத்திரை, அச்சங்கத்தின் தேசியச் செயலாளர் சக்தி சாந்த ஆனந்த மகரிஷி தலைமையில், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் புறப்பட்டு, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை கடந்து இன்று காலை தமிழகம் வந்தடைந்தது.
ஆனால் தமிழகத்தில் ரத யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் ரத யாத்திரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் மதுரை அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பதிவில்,
ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர் யார் யார் என்பது தெளிவாகி விட்டது. இவர்கள் அனைவரையும் இந்துக்கள் அரசியல் ரீதியாக புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.