சென்னை: நான் மாணவர்களைச் சந்திப்பதை சிலர் தடுக்கிறாரகள் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துளள தனியார் கல்லூரி ஒன்றின் ஆண்டு விழாவில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செவ்வாயன்று பங்கேற்றார். அந்த நிகழ்வில் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அவர்களது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
இதுவரை திரைப்படங்களில் நான் நடித்து வந்த பொழுது எனக்கு நீங்கள் பொருள் அளித்து வந்தீர்கள். இனி நான் உங்களுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய காலம்.
இனி என் வேலையினை நான் பார்க்கிறேன். உங்கள் வேலையினை நீங்கள் சரியாக பாருங்கள்.
நமது மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அரசியல் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு படித்து விட்டு இப்போது வீணாக்கி விடாதீர்கள்.
நான் மாணவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
நாம் அரசியல் தெரிந்து வைத்திருந்தால் அரசியல்வாதிகள் நியாயவான்களாக மாறி விடுவார்கள். நம்மை ஏமாற்ற முடியாது.
நான் சில கல்லூரிகளில் மாணவர்களைச் சந்திப்பதை சிலர் தடுக்கிறாரகள்
விவசாயிகளை மாணவர்கள் சிறுமையாக எண்ணக் கூடாது. உணவு எங்கிருந்து வருகிறது என்று தெரிந்து கொண்டு அதற்கு உரியவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும். விவசாயத்தில் புதிய உத்திகளை புகுத்த வேண்டும். விலை பொருட்களுக்குஉரிய விலை கிடைக்க வேண்டும்.
நம் வீட்டு பிள்ளைகள் என்ன படிக்க வேண்டுமென்பதை தீர்மானிக்கும் உரிமை நமக்குத்தான் உண்டு. நீட் விவகாரத்தில் மத்தியில் உள்ள யாருக்கும் தெளிவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.