அதிமுக உறுப்பினர் சேர்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு
அதிமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் பதிவு புதுப்பித்தலுக்கான கால அவகாசத்தை ஏப்ரல் 30 -ஆம் தேதி வரை நீட்டித்து கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
அதிமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் பதிவு புதுப்பித்தலுக்கான கால அவகாசத்தை ஏப்ரல் 30 -ஆம் தேதி வரை நீட்டித்து கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அதிமுகவில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவைப் புதுப்பிக்கவும், புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும் விண்ணப்பப் படிவங்கள் கடந்த ஜனவரி 29 -ஆம் தேதி முதல் கட்சித் தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.
கட்சியினர் அவர்கள் பெற்றுச் சென்ற உறுப்பினர் சேர்ப்புப் படிவங்களை பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர். தற்போது கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், கட்சியினர் இதற்கான பணிகளில் முழுக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, கட்சி உறுப்பினர் பதிவைப் புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களைச் சேர்த்தலுக்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டுமென கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த வேண்டுகோளை ஏற்று, புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும், உறுப்பினர் பதிவைப் புதுப்பிக்கவும் கால அவகாசம் ஏப்ரல் 30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.