முகப்பு
தமிழ்நாடு

கூட்டுறவு அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டம்: திமுக, காங். எம்எல்ஏக்கள் 4 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு

கூட்டுறவு தேர்தல் தொடர்பாக கூட்டுறவு இணைப் பதிவாளரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய குமரி மாவட்ட திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் மீது பெண்கள் வன்கொடுமைச்

Updated On : 30 மார்ச், 2018 at 1:35 AM
பகிர்:

கூட்டுறவு தேர்தல் தொடர்பாக கூட்டுறவு இணைப் பதிவாளரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய குமரி மாவட்ட திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், 114 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள், பால் கூட்டுறவு சங்கங்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்கள், கைத்தறி மற்றும் துணி நூல் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26ஆம் தேதி நடைபெற்றது.
இதில், போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் பட்டியல் குறிப்பிட்ட நேரத்தில் ஒட்டப்படவில்லை; பலரை வேட்பு மனு தாக்கல் செய்யவிடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, முதல்கட்ட தேர்தலை ரத்து செய்து, மறு தேர்தல் நடத்த வேண்டும் என, குமரி மாவட்டத்தின் 6 எம்.எல்.ஏ.க்களும் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன் திமுக எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகத்தில் புதன்கிழமை முற்பகல் 11 மணி முதல் இரவு 7.30 மணி வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் இணைப் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றதும், அங்கிருந்த இணைப் பதிவாளர் நடுக்காட்டு ராஜா எழுந்து நின்று மரியாதை கொடுக்கவில்லை எனக் கூறி, அவருடன் எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அவரை ஒருமையில் பேசியதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ், பிரின்ஸ், ராஜேஷ் குமார் உள்பட 11 பேர் மீது நேசமணி நகர் காவல் நிலையத்தில் இணைப் பதிவாளர் புகார் அளித்தார். அதில், எம்.எல்.ஏ.க்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கும்பலாக வந்து பணி செய்யவிடாமல் தடுத்தனர். அலுவலக நாற்காலிகளைப் உடைத்ததால் ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளன. துணைப் பதிவாளர் பிரியதர்ஷினியை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் இளநிலை உதவியாளர் சுபாஸை தாக்கிவிட்டு, கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்யும்படி மிரட்டினர் என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ், பிரின்ஸ், ராஜேஷ்குமார் உள்பட 10 பேர் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.