3ஆவது அணி அமைப்பது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி விவேகானந்தா கலைக்கல்லூரியில் எம்பி நிதியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை திறந்து வைக்க சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள் 3ஆவது அணி அமைப்பது குறித்து கேட்டதற்கு மாநில உரிமைகள் குறித்தான கூட்டமே தவிர கூட்டணி பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றார். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்ற அவர் 3ஆவது அணி அமைப்பது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என கூறினார்.
மாநில உரிமைகள் எல்லாம் விட்டுக்கொடுக்கப்பட்டது திமுக ஆட்சியில் தான் என தம்பித்துரை எம்பி கூறியிருப்பது குறித்து கேட்டதற்கு கல்வி மாநில லிஸ்டில் இருந்து மத்திய லிஸ்ட்டுக்கு போனது அதிமுக ஆட்சியில் தான் என்ற அவர், சரித்திரத்தின் பக்கத்தை தம்பித்துரையை புரட்டி பார்க்க சொல்லுங்கள் என தெரிவித்தார்.
மேலும் மாநில உரிமைகள் பறிபோனது அதிமுக ஆட்சி காலத்தில் தான் என்றார். காவிரி விசயத்தில் பிரதமரை சந்திப்பது குறித்து முதல்வர் உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்றார். ஸ்டெர்லைட் ஆலைக்கு சுற்றுச்சுழல் அனுமதி கொடுக்கப்பட்டதாகவும், ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக வரக்கூடிய தகவல் குறித்து கேட்டதற்கு விரைவில் ஆட்சி மாற்றம் வரும். திமுக ஆட்சி வந்ததும் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.