கூட்டணிக்காக பாஜக ஏங்கவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் ரஜினி போன்றவர்களிடம் கூட்டணி வைத்தே ஆக வேண்டும் என்று பாஜக ஏங்கவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் ரஜினி போன்றவர்களிடம் கூட்டணி வைத்தே ஆக வேண்டும் என்று பாஜக ஏங்கவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாஜக எஸ்.சி. அணி சார்பில் சமதர்ம எழுச்சி மாநில மாநாடு விழுப்புரத்தில் வரும் 27}ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான மாநாட்டு பந்தக் கால் நடும் நிகழ்ச்சி ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தாழ்த்தப்பட்டோருக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக விதிகளையே வகுத்து செயல்பட்டு வரும் கட்சி பாஜக. மேலும், நாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிகம் உள்ள கட்சியாகவும் பாஜக திகழ்கிறது.
பாஜக எஸ்.சி. அணி சார்பில் விழுப்புரத்தில் நடைபெறவுள்ள சமதர்ம எழுச்சி மாநில மாநாடு, தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிற வகையிலும், தமிழக முன்னேற்றத்துக்கான வழிகாட்டுலை வழங்கும் வகையிலும் அமையும். பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
150 ஆண்டு கால காவிரி நீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே பாஜகவின் முயற்சியாக உள்ளது. தண்ணீரைத் திறந்துவிடும் சூழல் உள்ள மாற்று அரசு அங்கு அமைய வேண்டும்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்காக பலரும் முயற்சிக்கின்றனர். ரஜினி கட்சி தொடங்கிய பிறகே, அவருடன் பாஜக கூட்டணி அமையுமா என்பது தெரியவரும். எனினும், ரஜினி போன்றவர்களிடம் கூட்டணி வைத்தே ஆக வேண்டும் என்று பாஜக ஏங்கிக் கிடக்கவில்லை. விழா ஒன்றுக்கு நான் சென்றபோது எஸ்.வி.சேகரும் வந்திருந்தார். அவரை நான் சந்தித்துப் பேசவில்லை என்றார்.
பாஜக எஸ்.சி. அணி மாநிலத் தலைவர் வெங்கடேசன், மாவட்டத் தலைவர்கள் விநாயகம், தாமோதரன், தேசியக் குழு உறுப்பினர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.