முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை (மே 24) நிறைவடைய உள்ளது. எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., முதுநிலை பட்டயம் ஆகிய படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கடந்த மே 19-ஆம் தேதி தொடங்கியது. அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
67 இடங்கள்: புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக்கு 877 பேர் அழைக்கப்பட்டனர், 489 பேர் பங்கேற்றனர். கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 34 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 33 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 67 இடங்கள் நிரம்பின.
இன்றைய கலந்தாய்வு: அரசு பல் மருத்துவக் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி, தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு முதுநிலை பல் மருத்துவ இடங்களுக்கு வியாழக்கிழமை (மே 24) காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்க உள்ளது. தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு முதுநிலை பல் மருத்துவ இடங்களுக்கு பிற்பகல் 2 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும். முதல் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை நிறைவு பெறும் நிலையில், முது நிலை படிப்புகளுக்கு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு மே 25-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.