தூத்துக்குடி சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி கருத்துக் கூறாததற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அளித்த பேட்டி: துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தால் அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மக்களை திசை திருப்புவதற்காக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். தூத்துக்குடி சம்பவத்தை மூடி மறைக்க வேண்டும் என்பதற்காகவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை முடிவதற்குள்ளேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவல்துறையினர் தற்காப்புக்காகச் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தீர்ப்புக் கூறியுள்ளார். மத்திய பாஜக ஆட்சியின் 4 ஆண்டு சாதனை குறித்துக் கேள்வி எழுப்புகிறீர்கள். தூத்துக்குடி சம்பவம் குறித்து இதுவரை பிரதமர் மோடி கருத்து கூறவில்லை. இதுதான் பாஜக ஆட்சியின் மிகப்பெரிய சாதனையாகும்.
திமுக சார்பில் தலா ரூ.2 லட்சம்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் தலா ரூ.2 லட்சத்தை அந்தக் கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸார் சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இச்சம்பவத்தின் போது உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.26 லட்சத்தை ஸ்டாலின் வழங்கியதாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.